சிட்னி : “ஆஸ்திரேலியா, கங்காருகளின் நாடு அல்ல; அது முரடர்களின் நாடு’ என்று, உலக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீது சமீப காலமாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவை கட்டுப்படுத்தப்படும் என ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தும் பயனில்லாமல் போனது. சில வாரங்கள் முன்பு, ஒரு இந்திய மாணவர் ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறி, தற்கொலை செய்து கொள்வது போன்ற வீடியோ காட்சியை, பலருக்கு இ-மெயில் செய்து, ஆஸ்திரேலியர்கள் அவப்பெயர் தேடிக் கொண்டனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய விளம்பர நிறுவனம் ஒன்று உலகம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட நாடுகளில், கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அதில் 26 ஆயிரம் பேர் கலந்து கொண்டு, ஆஸ்திரேலியா பற்றிய தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.ஆய்வு முடிவில், மிக மோசமான நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், “நட்பு நாடு’ எனும் அந்தஸ்தை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. பெரும்பாலானோர், ஆஸ்திரேலியாவை முரடர்களின் நாடு என்றும், அந்த நாட்டு மக்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.இந்தியர்களை நட்புடன் வரவேற்கும் 50 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 46வது இடமே கிடைத்துள்ளது.
கருத்துக் கணிப்பை நடத்திய சைமன் அன்ஹால்ட் இதுகுறித்துக் கூறியதாவது: ஆஸ்திரேலிய கல்வி நிபுணர்கள் கூட இந்திய மாணவர்களை எதிர்மறையாக விமர்சிக்கின்றனர். இந்திய மாணவர்கள் மட்டும் அல்ல. சீனா, பிரேசில் நாட்டு மாணவர்களும் தாக்கப்படுகின்றனர். பல சம்பவங்கள், வெளி உலகுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன. தொலைதூர நாடுகளான மெக்சிகோ, தென் கொரியா போன்ற நாட்டு மக்கள்கூட ஆஸ்திரேலியாவை “முரடர்கள் நிறைந்த நாடு’ என்று தான் கூறுகின்றனர். அதுபோல், நிறைய நாடுகள் ஆஸ்திரேலியாவுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றன.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் ஆசிய நாடுகள் மீது இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா மட்டும் அந்நாடுகளை பகைத்துக் கொள்வது தேவையற்றது. ஆசிய பிராந்தியத்தில் தனக்கென உள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு, விரைவில் இந்த பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அன்ஹால்ட் கூறினார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உயர் படிப்புகளில், குறைவான இந்திய மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மெல்போர்ன் பல்கலையின் துணைவேந்தர் கிளைன் டேவிஸ் கூறுகையில், “இந்திய துணைக் கண்ட மாணவர்கள் மீது நடந்து வரும் தொடர் வன்முறைச் சம்பவங்களால், நாட்டின் உயர்நிலைக் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உயர் படிப்புகளுக்கு, இந்தியாவில் இருந்து 80 சதவீத விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும்’ என்றார்.
Filed under: உலகம் | Leave a comment »