நுஸைபா பின்த் கஅப்
نسيبة بنت كعب
பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். “யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை” என்று கட்டளை பிறப்பிக்கப்பட, கனத்த சங்கிலிகளால் அவரைப் பூட்டி, இழுத்து வந்தார்கள் காவலர்கள். கால்விலங்கு தரையில் புரள வந்து நின்றார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. இவரது வரலாற்றை நாம் முன்னர் விரிவாகவே பார்த்தோம். இங்கு முன் கதைச் சுருக்கம்போல் முக்கிய நிகழ்வொன்றை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.
முகத்தில் எவ்விதக் கலக்கமோ, கலவரமோ இல்லாமல், மிகவும் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார் ஹபீப். அவர் என்ன குற்றம் செய்தார் என்று விலங்கு, பூட்டு, விசாரணை? அதைக் காண மொய்த்திருக்கும் கூட்டம்?
தானும் ஒரு நபி என்று உளற ஆரம்பித்து மக்களை வழிகெடுக்க முனைந்துவிட்ட முஸைலமாவை எச்சரித்து நபியவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதைச் சுமந்து வந்த தூதர், தோழர் ஹபீப் இப்னு ஸைது. தொன்றுதொட்டு தூதர்களுக்கு என்று அளிக்கப்பட வேண்டிய கௌரவம் உண்டு; அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அதெல்லாம் பொது விதி. ஆனால், நபியவர்களின் எச்சரிக்கை அளித்த கோபத்தில், என்ன செய்வது என்று தெரியவில்லை மடையன் முஸைலமாவுக்கு. ஹபீபைக் கைது செய்து, மறுநாள் விசாரணைக்கு இழுத்துவரச் சொல்லியிருந்தான்.
முஸைலமா அவரை நோக்கிக் கேட்டான். “முஹம்மத் யார்? அல்லாஹ்வின் தூதரா?”
உடனே பதில் வந்தது. “ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்”
கோபத்தால் வெடித்துவிடுவதைப்போல் அவரைப் பார்த்த முஸைலமா அடுத்த கேள்வி கேட்டான். “நானும் அல்லாஹ்வின் தூதன்தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகிறாயா?”
“எனக்குக் காது கொஞ்சம் மந்தம். நீ சொல்வது எனக்குக் கேட்கவில்லை”, முகத்தில் நையாண்டி எதுவும் வெளிக்காட்டாமல் அப்பாவியாய் பதில் கூறினார் ஹபீப்.
சீற்றத்தில் முகம் வெளுத்தது முஸைலமாவுக்கு. உதடுகள் துடித்தன. “அவர் உடலில் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்” என்றான்.
காத்திருந்த காவலன், “அப்படியே ஆகட்டும்” என்று கூர்மையான வாள் கொண்டு அவரது உடலின் ஒரு பகுதியை வெட்டி எறிய, நிலத்தில் விழுந்தது அது. தரையெல்லாம் ரத்தம்.
“முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி பகர்கிறாயா?” என்று மீண்டும் தன் கேள்வியைக் கேட்டான் முஸைலமா.
இப்பொழுதும் உடனே பதில் வந்தது. “ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்.”
“நானும் அல்லாஹ்வின் தூதரென்று சாட்சி கூறுகிறாயா?”
“நான்தான் சொன்னேனே, எனக்குக் காது மந்தம் என்று. அதனால் நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குக் கேட்கவில்லை”
கோபம் மேலும் அதிகமானது பொய்யனுக்கு. மற்றுமொரு பகுதியை வெட்டச் சொன்னான். உடலின் மற்றுமொரு பகுதி தரையில் விழுந்தது. குழுமியிருந்த கூட்டத்தாருக்கு அவரின் உறுதியையும் விடாப்பிடிக் கொள்கையையும் பார்த்து வியர்த்துக் கொட்ட, இவருக்கோ குருதி கொட்டிக் கொண்டிருந்தது.
முஸைலமாவும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்க, மீண்டும் மீண்டும் அதே பதில் வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடையில் தொங்கும் ஆட்டிறைச்சியை வெட்டுவார்களே அதைப்போல், காவலனும் ஹபீபின் உடலை பாகம் பாகமாய் வெட்டிக் கொண்டிருந்தான்.
பாதிக்கும் மேற்பட்ட அவரது அங்கங்கள் தரையில் துண்டுகளாக சிதறிக் கிடக்க, மறுபாதி இரத்தக் களறியில் படுகோரமாய் உருமாறிக் கிடந்தது. ஆனாலும் அவர் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டும் மாறவில்லை. “முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று சொன்னபடியே இறுதியில் விடைபெற்றது அவரது ஆவி. குற்றுயிராய் இருந்தவர் முற்றிலுமாய் இறந்து விழுந்தார். ஹபீப் இப்னு ஸைத் அல்-அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.
செய்தி மதீனா வந்து சேர்ந்தது. அவரின் தாயாரையும் அடைந்தது. மகன் இறந்த செய்தி ஒரு தாய்க்கு எத்தகைய சோகச் செய்தி? அதிலும் கண்டதுண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டார் என்றால் பெற்ற வயிற்றுக்கு அது எவ்வளவு வலி?
ஆனால் அதைக்கேட்ட அவரோ, “இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன்” என்றார் எளிதாய்!
“சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான் என் மகன். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்”
தம் மகனின் கோர முடிவைக் கேட்ட அந்த வீரத் தாய் நுஸைபா பின்த் அல் கஅப் அல்-மாஸினிய்யாவின் பதில் அவ்வளவுதான்! ரலியல்லாஹு அன்ஹா.
oOo
யத்ரிப் நகரில் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். எப்பொழுதும்போல் அவர்களது பொழுது ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் மக்காவிற்கு யாத்திரை சென்று வந்த யத்ரிப் மக்கள் சிலர் தம்முடன் மக்காவாசிகள் ஓரிருவரை அழைத்து வந்திருந்தனர் – முஸ்அப் இப்னு உமைர், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் – ரலியல்லாஹு அன்ஹுமா.
‘இவர்கள் சொல்வதைக் கேளுங்களேன்’ என்று மக்காவாசிகளைத் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் வந்தவர்கள். துவங்கியது முஸ்அப் இப்னு உமைரின் பணி. ஏறக்குறைய யத்ரிபின் அனைத்து வீட்டுக் கதவுகளையும் அவரது செய்தி தட்டியது. காந்தமாய் மாறிப்போனார் அவர். அதன் பலன் அடுத்த யாத்திரை காலத்தில் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட மதீனத்துக் குழு, மக்கா சென்றது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க. அந்தக் குழுவில் மேற்சொன்ன குடும்பமும் அடக்கம்.
மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இரண்டாம் அகபா உடன்படிக்கை.
தங்களது “உயிர், பொருள், செல்வம்” அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும் காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). உம்மு உமாரா என்பது புனைப்பெயராகத்தான் நுஸைபாவுக்கு ஏற்பட்டு இருந்ததே தவிர அவருக்கு உமாரா என்ற பெயரில் மகனோ மகளோ இல்லை.
அந்தக் குழுவில் இரண்டு பெண்கள் Continue reading
Filed under: இஸ்லாம் | Leave a comment »